நாமக்கல் மாவட்டம், காரைக்குறிச்சி ஊராட்சி, செல்லியாயிபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கடந்த திங்கட்கிழமையன்று வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் அம்மன், மதுரைவீரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் குடங்களில் கொண்டு வந்த புனித தீர்த்தங்களால் மாரியம்மனுக்கு அபிஷகம் செய்தனர்.
நான்காம் நாள் நிகழ்ச்சியான நேற்று மதியம் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்தும் மேலும் மாலை பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான இன்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையல் போட்டு பொங்கல் பூஜையும், அதனைத் தொடர்ந்து இரவு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியில் பெண்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் வளாகத்தில் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜை மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு கும்பம் கிணற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.