சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அலட்சியப் போக்காக இருப்பதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் 51-வது நாளாக இருந்து வரும் ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று நேற்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது.
பயிர்களுக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு காவல்துறை தடை விதித்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் சம்பு மற்றும் கன்னவுரி எல்லைகளில் SKM மற்றும் கிஷான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையின் கீழ் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, தல்லேவாலுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி வரும் விவசாய தலைவர் அபிமன்யு கோஹர், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாததற்காக கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அபிமன்யு கோஹர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தல்லேவாலின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் 51-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு எதையும் கேட்கத் தயாராக இல்லை. மாறாக, கோரிக்கைகளை ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவரது உடல் தண்ணீரைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் வாந்தியெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகள் அனைவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர். அவர்களும் தல்லேவாலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அமைதியான முறையில் சாகும் வரை உண்ணாவிரதம் முடிவெடுத்துள்ளனர்” என தெரிவித்தார்.