காவலர்கள் தொந்தரவு தாங்க முடியல… காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வந்தார். திடீரென மறைத்து வைத்திருந்த ‘பிளாஸ்க்கை’ திறந்து அதில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், வியாசர்பாடியில் நான் குடும்பத்துடன் வசித்து வருகின்றேன். எனது வீட்டுக்கு 2 காவலர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கின்றனர். எனது கணவர் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கு உள்ளது. மீண்டும் கஞ்சா வழக்கு போட முயற்சிக்கிறார்கள். இரவு நேரத்தில் கூட வந்து கதவை தட்டுகின்றனர். இதுதொடர்பாக, வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

எனது கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். காவலர்கள் வீட்டுக்கு வந்து அடிக்கடி விசாரிப்பதால், குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது. அவர்களால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் தெரிவித்தார்.