அண்ணாமலை ஆவேசம்: அறிவாலயத்தின் அத்தனை செங்கலையும் உருவாம விடமாட்டேன்..!

“பா.ஜ.க தலைவராக முடியாது என்று எனக்கு தெரியும். ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன்” என அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, அனைத்து மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும் இது போன்ற கூட்டம் நடத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் தான் போடும் பட்ஜெட்டிற்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்துவார். தான் போடும் பட்ஜெட் குறித்து பேசாமல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுவதற்காக ஸ்டாலின் என்றைக்கு திருவள்ளூர் சென்றாரோ, அப்போதே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் மோடி. 2014-ல் 3.45 கோடி பேர் வரி செலுத்தினார்கள். 10 ஆண்டுகளில், 7.90 கோடி பேர் வரி செலுத்துகின்றனர். 4.45 கோடி பேர் வரி செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். 7.90 கோடி பேரில் 6.80 கோடி பேர் ரூ.12 லட்சத்திற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்கள். அவர்கள் இந்த ஆண்டு வரி செலுத்த தேவையில்லை.

இதன்மூலம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைவார்கள். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான பட்ஜெட்டில் 5 முறை தமிழகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம் ரூ.8,054 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு ரூ.1,68,585 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2013-14 ஆம் ஆண்டு காங்கிரஸின் கடைசி பட்ஜெட், 15 லட்சம் கோடி பட்ஜெட் தான். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பட்ஜெட் 50 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது வளர்ச்சி இல்லையா? காங்கிரஸ் ஆட்சியில் இந்தியனின் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.86,000. தற்போது பாஜக ஆட்சியில் ரூ.2,20,000. இது வளர்ச்சி இல்லையா?

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் மாநில நிதிப்பகிர்வு ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு, மாநில நிதிப்பகிர்வு, ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் கோடி. மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு 5 மடங்கு அதிகரித்துள்ளது. முதல்வரே எதற்காக பொய் பேசுகிறீர்கள்? வட்டிக்கடை நடத்துகிறீர்கள் என்று முதல்வர் கேட்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி நிதிப்பகிர்வு கொடுக்கப்பட்டிருப்பது வட்டியா? ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது வட்டியா? விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவது வட்டியா? உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மாநில அரசுக்கு உதவுவதற்காக, வட்டியில்லாக் கடன் கொடுப்பதை விமர்சிக்கிறார்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சி இருக்கும் வரையில் ஆளுநராக ஆர்.என். ரவியும், பாஜக மாநில தலைவராக அண்ணாமலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே பிரச்சாரம் செய்து நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்.” எனப் பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என அண்ணாமலை ஆவேசமாகப் பேசியுள்ளார்.