அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தோணி கான் லான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்றைய முன்தினம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரை அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்க காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இறுதி சுற்றான 8-வது சுற்றில் 43 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதில் கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 2-வது பரிசும், அதன் பிறகு அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசும் பெற்ற பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்தார்.
13 காளைகளை அடக்கிய பொதும்பு ஸ்ரீதர் 2-வது பரிசையும், 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேஷ் 3-வது பரிசும், 9 காளை அடக்கிய ஏனாதி அஜய் 4-வது பரிசும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு ஆட்டோ, 3-வது பரிசு பைக், 4-வது பரிசு டிவிஎஸ் எக்ஸ்எல் வழங்கப்பட்டது.
சிறந்த காளைக்கான முதல் பரிசை சோலம் மோகனின் பாகுபலி பெற்றது. முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2-வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4-வது பரிசு லோடு பைக் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்த பின் மாடுபிடி வீரராக களமிறங்க முடிவு செய்தார். மாடு வீரராக களமிறங்க பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டார்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க ஆன்லைன் மூலம் தனது பெயரை பதிவு செய்து இருந்தார். இன்று ஜல்லிக்கட்டு திடலுக்கு வந்து உடல் தகுதி தேர்வில் பங்கேற்று அதில் தேர்வானார். மாடுபிடி வீரர்களுக்கு 40 வயது இருக்க வேண்டும். ஆனால், அந்தோணிக்கு 53 வயது என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.