செல்போனால் ஏற்பட்ட விபரீதம்..! அண்ணன் தங்கை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..!

இன்றைய நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது. இன்று பல் முளைக்காத சின்னஞ்சிறு குழந்தை செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் படங்களை பார்த்தும் ரசிக்கிறது. குழந்தைகள் எப்போதும் செல்போனில் தான் விளையாடும்.

நாற்பது வயதில் பலர் மொபைல் போனில் புது, புது விசயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறும் நிலையில் என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும் என தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதியும் உண்டு. ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோ பசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள். எந்நேரமும் செல்போனிலேயே தங்கை மூழ்கி கிடந்ததால், அவருக்கு அண்ணன் அட்வைஸ் செய்துள்ளார். கடைசியில் இப்படியொரு கொடுமை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்த தம்பதி ஜீவிதா சித்திரகுமார். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும், 16 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் ஐடிஐ படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்நிலையில் பவித்ரா நேற்று முன்தினம் இரவு செல்போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாராம்.. இதனால் அவரை பெற்றோர் கண்டித்து இருக்கிறார்கள். அப்போது மணி இரவு 11 ஆகிவிட்டது.. 11 மணிக்கு மேலும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த செல்போனை பறித்து, தூங்க செல்லுமாறு மணிகண்டன் அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனால், போனை திருப்பிக்கேட்டு அண்ணனிடம் சண்டை போட்டுள்ளார் பவித்ரா.

இந்த சண்டையில்தான், மணிகண்டன் செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டதாக தெரிகிறது. செல்போன் தன்னுடைய கண்ணெதிரே உடைந்துவிட்டதை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டே, வீட்டுக்கு பக்கத்திலிருந்த கிணற்றில் குதித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தன்னுடைய தங்கையை காப்பாற்றுவதற்காக அவரும் பின்னாடியே கிணற்றில் குதித்தார். ஆனால், அண்ணன், தங்கை இருவருமே தண்ணீரில் தத்தளிக்க துவங்கினார்கள். சிறிது நேரத்தில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, பவித்ரா, மணிகண்டன் இருவரையும் சடலமாகவே மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, மாத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்காக, அண்ணன் தங்கையிடையே ஏற்பட்ட சண்டையில் இருவருமே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்போன் எண் வீடு, ஆபீஸ் சுவர்களில் அச்சு..!

பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக நொளம்பூர் காவல் ஆய்வாளரின் செல்போன் எண், வீட்டின் சுவர், அலுவலக சுவர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை நொளம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1000 -க்கும் மேற்பட்ட சுவர்களில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் சந்திரசேகரின் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தங்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக சுவரில் உள்ள ஆய்வாளரின் செல்போன் நம்பரை நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவிகள், வேலைக்கு தனியாக செல்கின்ற பெண்கள் ஆகியோருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. நொளம்பூர் காவல் நிலைய காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் வசூலித்த கடன் செயலி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் பனியன் நிறுவன தொழிலாளி இவரது மனைவி கவிதா. திருப்பூரில் உள்ள ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கவிதாவின் செல்போனுக்கு ஒரு கடன் செயலி நிறுவனத்தில் இருந்து லிங்க் வந்தது. அதனை கிளிக் செய்து பார்த்தபோது , குறைந்த வட்டியில் ரூ.5ஆயிரம் கடன் வாங்கி கொள்ளலாம் என்ற தகவல் இருந்தது. இதையடுத்து இதற்காக அவரது புகைப்படம், ஆதார் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களை கடன் செயலியில் பதிவேற்றி கவிதா அந்த கடன் செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றார்.

இதைத்தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5ஆயிரத்திற்கான தவணை தொகையை செலுத்தி வந்தார். 8 மாதங்களில் அசல், வட்டியுடன் பணத்தை முழுவதுமாக செலுத்தி முடித்தார். இந்நிலையில் கடன் செயலியை சேர்ந்த கும்பல் கவிதாவின் செல்போனுக்கு ஒரு லிங்கை அனுப்பினர். அதனை கவிதா பார்த்தபோது அவரது ஆபாச புகைப்படங்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடன் செயலியை சேர்ந்த கும்பலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியது உள்ளது. அதனை செலுத்துங்கள். இல்லையென்றால் உங்களது ஆபாச புகைப்படங்களை இணையதளம் மற்றும் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த கவிதா, கடன் செயலி மோசடி கும்பல் கேட்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். 8 மாதங்களாக மிரட்டி கவிதாவிடம் இருந்து ரூ.26 லட்சம் வரை பறித்துள்ளனர். பணம் இல்லாதபட்சத்தில் கவிதா வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தி வந்துள்ளார். தொடர்ந்து மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பணம் இல்லாததால் இதுபற்றி தனது கணவர் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார்.

உடனே இதுகுறித்து அவர் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறைக்கு புகார் செய்தார். காவல்துறையினர் கவிதாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கடன் செயலி மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். மேலும் கவிதா, மோசடி கும்பலுக்கு செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த மோசடி செயலில் வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வர அந்த செயலின் கணக்குகள் குஜராத், மேற்கு வங்காளம், அசாம், புதுடெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்குகள் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த வங்கி கணக்குகளை காவல்துறை முடக்கி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.