அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள் என R.B. உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக் சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கோபிநாயக்கன்பட்டியில் பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய R.B. உதயகுமார்,” திருமங்கலம் நகராட்சியில் மட்டும் 300 கோடி அளவில் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
ஆனால் சிலர் என் மீது பழியை போட்டு எதுவும் செய்யவில்லை என்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள். இதே பதட்டம் அவர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. சட்டமன்றத்திலே ஆளும் கட்சி அதிமுக என்று ஒப்புதல் வழக்குமூலமே கொடுத்துவிட்டு பின்பு பதட்டமாக இருந்தது என்று பேசிட்டேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்தபோது வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் தான் திருக்கோயிலில் கல்யாணம் நடைபெற்றது என்று பொய்யான தகவலை தந்தார். இவர் அதிமுகவில் இருக்கும் பொழுது புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .இதை இங்கே கற்றுக்கொண்டு அங்கே போய் இதை செய்துள்ளார்.
மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக செய்ததாக பேசுகிறார். அம்மா தான் முதன் முதலில் ஆலயங்கள் தோறும் அன்னதானத் திட்டத்தை கொண்டு வந்தார். சேகர்பாபு பொய்யை தவிர வேறு ஏதும் தெரியாது. அது மட்டுமல்ல கருணாநிதி சமாதியின் மீது ஆண்டாள் கோபுரத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது இப்படி செய்த சேகர் பாபு பதவி விட்டு நீக்க வேண்டும். இன்றைக்கு திமுகவின் ஒரிஜினல் வித்துக்கள் எல்லாம் அமைதியாக உள்ளனர்.
ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள். அதேபோன்று சட்டமன்ற 72விதியின் படி அமைச்சர்கள் பொன்முடி, நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதை ஏற்கக் கூடாது என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் கண் ஜாடை காட்டுகிறார்.
இன்றைக்கு பொன்முடியை நீதிமன்றமே கடுமையாக கண்டித்து உள்ளது. இவரின் மீது தாமாக வழக்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டாம் அவரை பதவியில் விட்டு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இன்றைக்கு பெண்களை ஆபாசமாக பேசிய திமுகவிற்கு 2026 தேர்தலில் நீங்கள் சரியான பாடத்தை பெண்கள் புகட்ட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு விழக் கூடாது. இதன் மூலம் திமுகவிற்கு பூஜ்ஜியத்தையும், அதிமுகவிற்கு ராஜ்ஜியத்தையும் கொடுக்க வேண்டும் என R.B. உதயகுமார் தெரிவித்தார்.