+ 2 தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் + 2, SSLC தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 -ஆம் தேதி வரை நடைபெற்றன.+ 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.
விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 17-ந்தேதி அந்த பணிகள் நிறைவடைந்தன. அத்தனை தொடர்ந்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளஸ்-2 தோ்வு முடிவுகள் மே-9-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று + 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஓவியாஞ்சலி ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களையும் மற்ற பாடப்பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவி ஓவியஞ்சலிக்கு அவர் படித்த பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.70 சதவீதம் தேர்ச்சி என வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.