தமிழிசை கேள்வி: அப்போ நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது வேலையில்லாமல் தான் கருத்து சொன்னீர்களா..!?

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா..!? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா… ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்…என பதிவிட்டுள்ளார்.

அன்புமணி கொந்தளிப்பு: ராமதாஸ் கைகாட்டியதால் தான் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது..!

ராமதாஸ் கைகாட்டியதால் தான் மு.க.ஸ்டாலினின் தந்தை கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டு இருக்கும் அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருப்பது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் வினா எழுப்பிய போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கிறார்.

“ராமதாஸுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.” என்று கொந்தளித்து இருக்கிறார். இதைக் கேட்டவுடன் இப்படி ஒரு முதல்வர் பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. அந்த அளவுக்கு ராமதாஸ் ஒன்றும் தவறாக எதையும் கேட்டுவிடவில்லை. “அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.” என்று தான் ராமதாஸ் வினா எழுப்பியிருந்தார். அது மிகவும் சரியானதே.

அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டு இருக்கிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும் அரசியல் கட்சியின் நிறுவனராகவும் ராமதாஸுக்கு அக்கறை இருக்கிறது. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு இருந்தார்.

அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் கூறப்பட்டு இருக்கிறது. அதானி குழுமத்தின் தலைவர் அதானியும், அவரது புதல்வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்தும், அதானியுடனான சந்திப்பு அலுவல்பூர்வமானதா, தனிப்பட்ட முறையிலானதா? என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது முதல்வர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் கடமை தானே?

அந்தக் கடமையைச் செய்வதற்கு மாறாக, ராமதாஸுக்கு வேலை இல்லை; அதனால் அறிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்; அவருக்கெல்லாம் நான் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தைத் தான் காட்டுகிறது. அரசின் செயல்பாடுகள் பற்றி எழுப்பப்படும் வினாக்களுக்கு பதில் கூறாமல் இருக்க அவர் ஒன்றும் மறைந்த ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினும் இல்லை; தமிழ்நாடு ஒன்றும் அவர்களின் குடும்ப சொத்தும் இல்லை.

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளில் வெறும் 40 விழுக்காட்டினரின் ஆதரவை மட்டுமே பெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரம் நிரந்தரமானது அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமல்ல…. ஒட்டுமொத்த உலகத்திலும் எங்களைக் கேள்வி கேட்க முடியாது? என்ற இறுமாப்பில் திளைத்தவர்களின் நிலை என்னவானது? என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து பதில் கூறித்தான் ஆக வேண்டும்.

ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுமானால் அதானிகளை ரகசியமாக சந்திப்பது போன்ற ஏராளமான வேலைகள் இருக்கலாம். ஆனால், ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்திப்பதும், அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதும் தான் வேலை. அதைத்தான் அவர் செய்து வருகிறார். ராமதாஸ் மேற்கொண்ட பணிகளால் தான் தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகள் வென்றெடுக்கப்பட்டன.

அவர் செய்த வேலைகளால் தான் தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகளும், தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளும் மூடப்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளால் தான் 108 அவசர ஊர்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அவர் கொடுத்த அழுத்தத்தால் தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டது. அவர் கொடுத்த ஆதரவால் தான் 2006 -ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராக முடிந்தது; மு.க.ஸ்டாலின் முதல் முறையாக அமைச்சராக முடிந்தது.

ராமதாஸ், கருணாநிதியை கேட்டுக் கொண்டதால் தான் 2009-ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக முடிந்தது. ராமதாஸ் கைகாட்டியதால் தான் மு.க.ஸ்டாலினின் தந்தை கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது. அவர் நடத்திய போராட்டங்களால் தான் சென்னைக்கு வெளியில் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மக்களிடமிருந்து பறித்து துணை நகரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திமுக அரசின் கபளீகர திட்டம் தடுக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களால் விளைந்த ஒரு நன்மையைக் கூற முடியுமா? பதவி வரும் போது பணிவும் வரவேண்டும், துணிவும் வர வேண்டும் என்பார்கள். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதுவுமே வரவில்லை. இனியாவது பதவிக்கேற்ற பக்குவத்தையும், பணிவையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள பங்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.” என அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசுப் பொருளாக மாறியுள்ள ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் திடீர் பதிவு..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என பாமக நிறுவனர் ராமதாஸின் திடீர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் நீங்காத நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜக கண்டு கொள்ளவில்லை என தெரிகின்றது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மத்திய அரசு அளித்தது. மத்தியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளன.

மேலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ராமதாஸ்ஸூக்கு ஏற்படுத்தி இயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த திடீர் பதிவு பாஜக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாஸின் இந்த பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.