சீமான் வலியுறுத்தல்: குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் திமுக அரசு அடக்குமுறைகளை ஏவுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ்செயலாகும்.

சென்னை மாநகரில் ஆறு, ஏரி, கால்வாய், குளங்களை ஒட்டி வாழும் ஏழை-எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, ஏரிகளையும், நீர்வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?

அரியவகை பறவைகள் வந்து தங்கும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மழைநீர் வடிகாலாக திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை அழித்து மலைமலையாக குப்பை கொட்டப்படுகிறதே. அவற்றை தடுத்து அந்நிலத்தை மீட்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, என அனைத்துச் சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கு செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டுகளில் சென்னையின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. ஏழை மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து பன்னாட்டுப் பெருமுதலாளிகள், வடநாட்டு வியாபாரிகள், நிலவிற்பன்னர்கள் ஆகியோருக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை திமுக அரசு தாரைவார்க்கிறது. அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்கத் திறனற்ற திமுக அரசு, அப்பாவி மக்கள் வாழும் வாழ்விடங்களை இடித்து, அதிகாரத் துணைகொண்டு மிரட்டி, விரட்டுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு சென்னை வேளச்சேரி பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என சீமான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மௌன சத்தம்” எனும் நூல் வெளியீடு..!

புலனாய்வு பத்திரிகையாளர் ஆ. மோகன் அவர்கள் எழுதிய “மௌன சத்தம்” எனும் நூல் வெளியீட்டு விழா 25.08.2024 மாலை சென்னையில் நடைபெற்றது.

சென்னை வேளச்சேரி டான்சி நகரில் அமைந்துள்ள யூ எஸ் பார்ட்டி ஹாலில் புலனாய்வு பத்திரிகையாளர் ஆ. மோகன் அவர்கள் எழுதிய மௌன சத்தம் நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் R. சிவகுமார் ஐபிஎஸ் மற்றும் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கருணாநிதி, மூத்த பத்திரிகையாளர் திரு. சேதுராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு. சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறுவனின் கால் விரல் வலிக்கு கால் மூட்டிலிருந்து பாதம் எடுத்த கில்லாடி மருத்துவர்..!

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சின்னையாவின் 13 வயதில் மகனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி இடது கால் விரலில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கிருந்த மருத்துவர் நரம்பு சார்ந்த பிரச்னை என்று கூறி, ஆதம்பாக்கத்தில் உள்ள மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் சரவணன் பாலச்சந்தரை பரிந்துரை செய்ததாக தெரிகிறது. எனவே அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் அங்கே சென்றுள்ளனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சரவணன், காலில் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் இதனை சரி செய்துவிடலாம் என்றும் கூறி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் கால் கருப்பு நிறமாக மாறியதால் பதறிப்போன பெற்றோர், மீண்டும் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர், காலில் வேறொரு பிரச்னை இருப்பதாகவும், இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி அந்த சிகிச்சையும் செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகு சிறுவனின் கால் மூட்டுக்கு கீழ் கட்டி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கட்டியை அகற்ற வேறொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, அதுவும் செய்யப்பட்டது. எனினும் அந்த கால் சரியாகாமல் இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக கூறி, பெற்றோரை சமரசம் செய்து அவரது காலை நீக்கியுள்ளது மருத்துவமனை.

அதன்படி சிறுவனுக்கு கால், மூட்டிலிருந்து பாதம் வரை அகற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தனது மகனின் கால் பறிபோனதை உணர்ந்த பெற்றோர், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்துள்ளனர். இதனிடையே பிரச்சனை பெரிதாக ஆகிவிடக்கூடாது என்பதால் கால் அறுவை சிகிச்சைக்கான செலவை மருத்துவமனையே ஏற்பதாகவும், மருந்துகளுக்கு உண்டான பணத்தை மட்டும் பொறுமையாக செலுத்துமாறும் சிறுவனின் பெற்றோரிடம் மருத்துவர் சரவணண் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் ஆதம்பாக்கத்தில் உள்ள மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், வருகைப் பதிவுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் 7 நாள்களுக்குள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.