பெண் உதவி ஆய்வாளர் பிரணிதா காவல் நிலையத்துக்குள் தாக்கியதாக விசிக நிர்வாகி மீது புகார்..!

காரைக்குடி அருகே காவல் நிலையத்துக்குள் காவல் உதவி ஆய்வாளர் பிரணிதா தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பிரணிதா. பிரணிதா நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, புகார் மனு தொடர்பான தகவலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, அவர்களுக்கும், பிரணிதாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, காவல் நிலையத்தில் சீருடையில் இருந்த தன்னை விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதில் காயமடைந்ததாக பிரணிதா புகார் தெரிவித்தார். அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளரை தாங்கள் தாக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

தொல் திருமாவளவன்: விஜய் நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார்…!

விஜய் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஒரு ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், திருமாவளவன் மனது முழுக்க முழுக்க எங்களோடு தான் இருக்கும், என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது, என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஒரு ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.

விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமால் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு. இந்த விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு, தவெக தலைவர் விஜய் கூறுவது போல எந்த அழுத்தமும், காரணமும் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. தொடக்கத்திலேயே பதிப்பகத்தாரிடம் இதுகுறித்து விளக்கி கூறியிருக்கிறேன்.

விஜய்யும் நானும் ஒரே மேடையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிற சூழல் இருந்தால், இதைவைத்து அரசியல் செய்யக்கூடிய சிலர், அல்லது அதற்கான செயல் திட்டத்தை வகுத்துக் காத்துக்கொண்டிருக்கிற சிலர், திரிபுவாதம் செய்வதற்கும், திசை திருப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கு இடம் தரக்கூடாது என்ற அடிப்படையில் ஒரு தொலைநோக்குப் பார்வையோடுதான் இந்த முடிவை எடுப்பதாக விளக்கி கூறியிருந்தேன்.

விஜய் குறிப்பிடுவது போல திமுகவோ, அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளோ, எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்குப் பணிந்து, இணங்கி முடிவெடுக்க முடியாமல் தேங்கி நிற்கிற நிலையில் விசிகவும், நானும் இல்லை.” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

வன்னி அரசு: சமரச பாயசம் கிண்டும் விஜயுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது..!

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார் என விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

விசிக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தைத் தொகுத்துள்ள நிலையில், அந்த புத்தக வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது. இந்த புத்தகத்தை முதலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டு விசிக தலைவர் தொல் திருமாவளவன் பெற்றுக் கொள்வதாக இருந்தது. இருப்பினும், பின்னர் தொல் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஜய் கலந்து கொள்வதால் தொல் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தகவல் பரவியது. இதற்கிடையே இதற்கு விசிக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு மிகவும் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில், “எச்சரிக்கை… புரட்சியாளர்களைப் பொட்டலம் கட்ட முடியாது! புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் எமது தலைவர் திருமாவளவன்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் தலித்களின் விடுதலைக்காகவும் சமரசமின்றி பாடாற்றி வருபவர். தேர்தல் புறக்கணிப்பு காலத்தில் எப்படி தீவிரத்துடன் சனாதனக்கும்பலை எதிர்த்தாரோ அப்படித்தான், தேர்தல் பாதைக்கு வந்த பிறகும் களமாடி வருகிறார். இன்றைக்குத் தமிழ்நாட்டில் சனாதனக்கும்பலை எதிர்த்துத் திணறவைப்பது சிறுத்தைகள் தான். அப்படிப்பட்ட பேரியக்கத்தை வழி நடத்திவரும் எமது தலைவரை யாரும் பின்னிருந்து வழி நடத்திட முடியாது.

சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள். நாளை திசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். 2001-ஆம் ஆண்டு முதன்முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனார் தலைவர் திருமாவளவன்.

2003-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினமா செய்தார். பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால், கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தவர் எமது தலைவர். அப்படிப்பட்டக் கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும் என சில தரகர்கள் முயற்சிப்பது அரசியல் சோகமாகும். தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன.

அம்பேத்கரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தங்களது அரசியல் சதி வெற்றி பெற வேண்டுமென அவர்கள் துடிக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் யாத்துத் தந்த தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச்சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்த ஊடக நிறுவனங்களை எதிர்த்துப் போராடாத சில முன்னாள் ஊடகவியலாளர்கள், எப்போதும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் எமது தலைவர் எழுச்சித்தமிழரை சுயநலத்துக்காக வசை பாடுகிறார்கள்.

அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம்.

ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது” என வன்னி அரசு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன் முதலமைச்சர் கனவு குறித்த கேள்விக்கு.. “ஆசையே அலை போலே… ” பாடல் பாடி ஜெயக்குமார் பதில்..!

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே என பாட்டு பாடி பதிலளித்த ஜெயக்குமார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தனக்கும் முதலமைச்சர் கனவு இருப்பதாகவும் அதற்கான மையப் புள்ளிகள் அமையவில்லை என கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு ஜெயக்குமார் அவர்கள், ‘ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே என தொல் திருமாவளனை பாட்டு பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”கனவு காணுங்கள் என அப்துல் கலாம் கூறியது போன்று எல்லோரும் கனவு காணலாம். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் , தனியார் திருமண மண்டபத்தை திறந்துவைத்து தொல் திருமாவளவன் பேசினார். அப்போது, நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக் காட்டினார்.

அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம் இன்னும் கோலங்கள் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது , ஒரு புள்ளி வைத்துக் கொண்டு கோலம் போட முடியாது நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும் அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது இப்போது பலர் கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் கனவோடு இருக்கிறார்கள் என தொல் திருமாவளவன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கொள்கை உங்களுக்கு… எங்கள் கொள்கை எங்களுக்கு..! அதே மேடையில் நிராகரித்த திருமாவளவன்..!

யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம். அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு என தொல் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசினார். அப்போது, “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என்றார்.

தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்” என இன்பதுரை தெரிவித்தார்.

இதையடுத்து, தொல் திருமாவளவன் பேசுகையில், “வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். உங்களோடு களத்தில் நிற்போம். மக்களோடு இருப்போம். அன்புச் சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும் இதுதான் பதில். கட்சிகளோடு அல்ல, மக்களுக்காக போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அங்கு நிற்போம். அடையாளம் தாண்டி சிந்திப்பதில் பக்குவம் பெறுவோம். யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம்.

அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு. தேர்தல் அரசியல் என்பது ஒரு நிலைப்பாடு, உத்தி. அதை எல்லாம் தாண்டி மனித உறவுகள் மேம்பட வேண்டும். மக்களுக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்.

தேர்தல் என்பது நாட்டு நலன், கட்சி நலனை அடிப்படையாக கொண்டது. காலச்சூழலில் முரண்பாடான முடிவைக் கூட எடுக்க நேரிடும். கடுமையாக எதிர்க்கும் பாஜகவுடனே ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டம் போட்டு அவர்களுடன் நின்றார்கள். அதை எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்கக்கூடாது” என தொல் திருமாவளவன் பேசினார்.

திருமாவளவன் கேள்வி: விஜய் ‘ஆர்கானிக்னா..!? , விசிக என்ன இன்-ஆர்கானிக்கா ..?!

“விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா?” என தொல் திருமாவளவன் வேதியியல் முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு நடந்த விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அந்நிகழ்வில் தொல். திருமாவளவன் பேசுகையில், “ஒரு ஊரில் ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது.

அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு. அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றிவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள். இது அண்மைக் காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழலைச் சந்தித்து வருகிறோம். கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம்.

கொடி யுத்தம் என்கிற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுக்கலாம். நான் அடிக்கடி சொல்லுவேன், எனக்குப் பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னைப் பின்னால் கூறுவார்கள். அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள். இதுதான் இந்த மண்ணின் உளவியல் எனக்கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.

ஏன் திரும்பத் திரும்பத் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். நானாகவா சொல்கிறேன்? நீங்கள் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதால் தான் அந்த பதிலைக் கூறுகிறேன். திமுக விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட்னர் என்றால், நாங்கள் மைனர் பார்ட்னராக இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாகச் சென்று திமுகவிடம் டீல் பண்ணவில்லை, காங்கிரஸ் தனியாகச் சென்று கேட்கவில்லை.

நாங்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாக மாறும். திமுகவுக்காக சொல்லவில்லை, அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம். கொள்கை பிடிப்போடு இருக்கிறோம். அங்கே போனால் வளரலாமா, இங்கே போனால் வளரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது எங்களுக்கு தேவை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. கொள்கைப் பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. இது நமக்கு ஒரு பாடம். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு; அது திமுகவுக்கு கிடையாது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். நம் மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது.

ஆனால், 12 மணி… 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்துக் கிடக்கின்றனர். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் என யாரேனும் சொன்னார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது.

இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும்; இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம் நம்மை நோக்கி வரும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

பாமக, விசிக கொடிக்கம்ப பீடங்களை உடைத்த பெண்..! எங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை..!

எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை’ என விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை ஆவேசமாக உடைத்த பெண்மணி. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் இருந்து மஞ்சக்கொல்லை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த அவர், ஓரமாக சென்று மது அருந்துமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார். இதில் இளைஞர்களுக்கும் செல்லதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்லதுரை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் உடையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை புவனகிரி காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் – புவனகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள நபர்களையும் கைது செய்வதாக உறுதி அளித்தது இத்தனை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி அருட்செல்வி என்பவர் நேற்று முன்தினம் ஆத்திரத்துடன் கடப்பாறையால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தினார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கடப்பாரையை பிடுங்கி அருகே இருந்த வாய்க்காலில் வீசினர்.

ஆனால், அருட்செல்வி அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்ப பீடத்தை மற்றொரு இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதோடு, ‘‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது, எங்கள் ஊருக்கு எந்த கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை, நாங்கள் இந்த ஊரில் அமைதியாக வாழ வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தொல் திருமாவளவன்: நவம்பர் -01 தமிழர் இறையாண்மை நாள்!

நவம்பர் -01 தமிழர் இறையாண்மை நாள்! தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்; தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்! தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01-ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் ‘மாநிலம் உருவான நாளாக’ மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல.

தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே, இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான ‘உரிமை நிலமாக’ எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை “தமிழர் இறையாண்மை நாளாக” விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01-ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல “மாநில நாளைக்” கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். “நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழர் இறையாண்மை நாள்’ என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும்.

தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா – அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உள்ளிட்ட நம்முடைய முன்னோர்களுடைய முடிவு. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக இந்திய ஒன்றிய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950 -களிலேயே துவங்கிவிட்டது.

1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற் சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23 ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது.1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்’ மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம், அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்துச் சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட ‘கனிமவளங்கள் சட்டம்’ மாநில அரசுகளின் பொருளாதாரத் தற்சார்புக்கு வேட்டுவைத்தது.

இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை ஒன்றிய அரசை ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சியாக இருந்த காரணத்தினால் ‘மாநில உரிமைகள்’ என்கிற பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையாக மட்மே முதலில் பார்க்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் ‘மாநில சுயாட்சி’ முழக்கம் தமிழ் நாட்டிலிருந்து வீறுகொண்டு எழுந்தது .

அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு ஒன்றிய அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது. தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரங்களைத் தம்வசம் குவித்துக்கொண்ட போக்கும்; மாநில இறையாண்மை குறித்து வலியுறுத்த வேண்டியதன் தேவையை அதிகரித்துள்ளன.

ஒரே நாடு, ஒரே மதம் , ஒரே மொழி என இதுவரைப் பேசிவந்த பாஜகவினர் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும்.

இந்நிலையில், இதுவரை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்! என தொல் திருமாவளவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு: விசிகவில் இருந்து அருந்ததியரை பிரிக்க RSS சதி நடக்கிறது..!

விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற RSS சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என நாளை விசிக ஆர்ப்பாட்டம்..!

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் 10-ம் தேதி விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழுகூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள் துரை.ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், முதன்மைச் செயலாளர் பாவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசும், மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசும் முன்வர வேண்டும்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மாநாடு ஒருங்கிணைக்கப்படும். ஒன்றியம் உள்ளிட்ட நிலைகளில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ‘சாம்சங்’ நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அரசு அனுமதிப்பதோடு, அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டு, பாலஸ்தீன மக்களின்கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகள் போன்றவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் SC, ST, OBC பிரிவினருக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.

மாநில SC, ST ஆணையம் அமைத்தது மற்றும் SC, ST துணைத் திட்டத்துக்கான சட்டம் இயற்றியது போன்றவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி. பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எஸ்சி இடஒதுக்கீட்டின் அளவை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும். SC பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையிலுள்ள ‘ன்’ விகுதியை பிற்படுத்தப்பட்டோருக்கு மாற்றப்பட்டது போல ‘ர்’ என முடியும் வகையில் மாற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.