விஜய்யை விமர்சனம் செய்த கருணாஸ்: “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம்..!”

“பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது. பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது, நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும் என கருணாஸ் விமர்சனம் செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது.

பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது. நஞ்சு கக்கக்கூடிய கொடிய திரவம் தான் இந்த பாதரசம். தங்கத்தையும் வெள்ளியையும் இந்த பாதரசம் உருக்கும், உருக்குலைத்து விடும்.. அதேபோல நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும். இதுபோன்ற பாதரசத்தை உருவாக்கிப் பாதுகாப்பு கொடுப்பதே பாசிசங்கள் தான் என்பதை நீங்கள் அத்தனை பேரும் உணர வேண்டும்” என கருணாஸ் விமர்சனம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: 3-வது மொழி மாணவர்களுக்கு பெரும் சுமை.. 56 மொழிகளை இந்தி அழித்துள்ளது .. !

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், பாஜக ஆளாத மாநிலங்களிலும் தேசியக் கல்வி கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு ஏற்கனவே தரமான கல்வியை கொடுக்கிறது. பிஎம்ஸ்ரீ மூலம் கல்வித் தரத்தை உயர்த்த போகிறீர்கள் என்றால், அப்படி அந்த திட்டத்தில் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையை பிஎம்ஸ்ரீ மூலம் கொண்டு வருவதை ஏற்கனவே அறிந்து கொண்டுவிட்டோம். மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மாணவர்கள் இடைநிற்றலை குறைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து வருகிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இளைய சமுதாயத்தை மனதில் வைத்து திட்டத்தை உருவாக்கி இருந்தால், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. சாதாரணமாக அமர்ந்து கையெழுத்திடுங்கள்.. பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில் வலியுறுத்தி இருக்கிறார். இருமொழிக் கொள்கையில் படித்துள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என்று பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் 3-வது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும் போதுதான், தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். மும்மொழி கொள்கை மாணவர்களின் கால்களில் சங்கிலியை போட்டு இழுப்பதை போன்றதாகும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியாக ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைதான் எதிர்க்கிறோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ‛Get Out Modi’.. ஏன்யா இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க..!

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..” என்று சவால் விட்டார்.

இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi’ என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..” என பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி”

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கள்ளசாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் கல்லூரி மாணவர் உள்பட இருவர் படுகொலை..!

கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பவர்களை அடிப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதுமாக வாடிக்கையாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு, இவர்கள் கள்ளச்சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கள்ளச்சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ், மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் ஹரிசக்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். அதையடுத்து கள்ளச்சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இவர்களிடம் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். கள்ளச்சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மூவேந்தனை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி கூட்டத்திற்கு நோ..! ஸ்டாலின் கூட்டத்தில் “ஆஜர்” செங்கோட்டையன்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சிக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுஎன ஒன்று உள்ளது. இதில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தொகுதிகள் வாரியாக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்படும். எனவே இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று இந்த மாநில வளர்ச்சி குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொல். திருமாவளவன், துரை. வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மாநில வளர்ச்சி குழுவில் உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையனும் இதில் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதலமைச்சர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, பேசிய செங்கோட்டையன் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குருவின் மகள் மற்றும் மகன் ..!

காடுவெட்டி குருவுடைய பிறந்த நாள் விழா மற்றும் காடுவெட்டி குருவின் வெண்கல சிலை அமைக்க விற்கு அரசு அனுமதி அளித்ததிற்கு காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, மகன் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் தமிழக அரசிற்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். வன்னியர் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று , 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்து தந்ததற்காக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை உள்ளிட்டோர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வன்னியர் சமூக மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987 -ஆம் ஆண்டு போராட்டத்தில் நடத்தியதில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 1989 -ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதி தலைமையிலான அரசு , இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்து கொடுத்து , அவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கி கல்வியிலும் , வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்தினார்.

2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் , 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று ” 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்ககூடிய வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று கூறினார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த ஜனவரி மாதம் 28 -ஆம் தேதி நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்நிலையில் , இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் , வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராம மூர்த்தி , காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது , வன்னியர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முதல்வர் உடனான சந்திப் பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் நான் பேசியவுடன், நிச்சயம் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் கூறியிருந்தார். அதற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன்” என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் காடுவெட்டி மனோஜ் ஆகியோர் பேசுகையில், “இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் திறந்த முதல்வருக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். மேலும், வன்னியர் சமூகம் சார்ந்த பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம்.

அதை நிறைவேற்றி தருவதாக முதல்வர் கூறியுள்ளார்” மறைந்த எங்கள் அப்பா காடுவெட்டி குருவுடைய பிறந்த நாள் விழாவிற்கு அனுமதி கேட்ட நிலையில், அரசும் அனுமதி அளித்திருந்தது. அதே போல் காடுவெட்டி குருவின் வெண்கல சிலை அமைக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுக்கும் தமிழக அரசிற்கும் முதலவருக்கும் நன்றி தெரிவித்தோம்” எனத் தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின்: “என்னை செயல்பட வைப்பது என்னுடைய எதிரிகள்” என தந்தை பெரியார் சொல்வார்..!

தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக, மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில் சிபல், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி – மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரே நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது.

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்த வரைக்கும், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பி இருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல் திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்.

இது, பாஜக என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல. இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பாஜகவும், பாஜகவுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பாஜகவை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி. “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பாஜக தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பாஜகவின் செயல் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்.

அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள். தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களைக் கட்டமைப்பார்கள். அளவில்லாத அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள். பாஜகவின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும். இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்,வெற்றி பெற வேண்டும்.

இப்போது கூட, இந்திய நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி . எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர். இருந்தாலும், மத்திய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள். அவர் பேசப் பேசத்தான் பாஜக அம்பலப்படுகிறது. திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது.

மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய கட்சியினர் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான். தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. ஏன் என்றால், கருத்தியல் ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள். அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை – சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.

எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும். தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது, பாராட்டுக்குரியது. இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.

2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க திமுக சட்டத்துறை சளைக்காமல் சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும். சட்டத்துறை சார்பில், வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். அதை ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோவை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பழனிசாமி பேச்சு: ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள்..!

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார். ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள் என பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் MGR-இன் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த MGR மற்றவர்கள் தங்களுடைய வீட்டுக்காக வாழ்கிறார்கள். இந்த இயக்கத்தில் இருப்பது நமக்கு மிகப்பெரிய பெருமை. எம்ஜிஆரை புகழ்ந்தால்தான் மற்றவர்கள் கட்சி நடத்த முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர் MGR. 1962-ஆம் ஆண்டு MLA -யாக வந்தார்; அவர் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் சேவை செய்து முதல்வரானார்.

தற்போது தமிழகத்தில் மகன் ஆட்சியில் அமர வேண்டும், கொள்ளு பேரனும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது. MGR விட்டு சென்ற பணியை ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை நாம்தான் அவர்களுக்கு வாரிசு. தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் நம்முடைய தலைவர்கள். தொண்டர்கள் நிறைந்த கட்சி அதிமுக. அதிமுகவில் வாரிசு இல்லை திமுகவில் வாரிசு உள்ளது. ஜல்லிக்கட்டில் பார்த்திருப்பீர்கள்.

அதிமுகவை அழிக்கவும் உடைக்கவும் பலர் முயற்சிக்கின்றனர். கட்சியை யாராலும் அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. இது உயிரோட்டம் உள்ள கட்சி, தெய்வ பிறவிகள் உருவாக்கிய கட்சி. MGR உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சி. அதிமுகவுக்கு எதிராக எத்தனை வழக்குகள் வந்தாலும் அது நிலைக்காது; சட்டப்படி அதிமுக நம்மிடம் உள்ளது, யாரும் அதை பற்றி கவலை பட தேவையில்லை. எதிரிகள் சூழ்ச்சி செய்து கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை முறியடிக்க வேண்டும்.

நம்முடைய தலைவர்கள் பல சோதனைகளை கடந்து கட்சியை நடத்தினார்கள். நாமும் அது மாதிரியான சோதனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். 2026-ஆம் ஆண்டு கண்டிப்பாக அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான். இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை. போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே. தினம் ஒரு விளம்பரம், தினம் ஒரு அறிவிப்பு, ஒரு குழு அமைப்பார், இந்த அரசாங்கம் குழு அரசாங்கம், குழு போட்டவுடன் முடித்து விடுகின்றனர். புதிய அறிவிப்பு வராத நாளே இல்லை.

அதிமுக ஆட்சியில் கடுமையான கொரோனா காலம் மக்களின் உயிரைக் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். 36 ஆயிரம் கோடி மக்களுக்காக செலவழித்தோம். 11 மாதம் ரேஷன் கடைகளில் அனைத்தும் இலவசமாக கொடுத்தோம். ரேஷன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள். நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் பஞ்சம் இருந்தது. ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்தோம். ஸ்டாலின் செயலற்ற முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார்.

7.5 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றினோம். ஏழை மக்கள் இருக்கும் பகுதியினை தேர்வு செய்து அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. 2000 அம்மா மினி கிளினிக்கினை இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் மூடிவிட்டனர். அதிமுக அரசில் கொண்டு வந்த அனைத்தையும் நிறுத்துவது தான் இந்த ஆட்சியின் சாதனை. ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. 11 அரசு மருத்துவ கல்லூரி நாங்கள் கொண்டு வந்தோம். இன்ஜினியரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி புதிய பள்ளிகள் தொடங்கினோம்.

இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் என இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டு மக்களுக்காக ஆட்சி செய்வது தான் திமுக. மக்களுக்கு ஆட்சி செய்வது அண்ணா திமுக. மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது

தற்போது திமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்து விரைவாக திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம். ஆனால், ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது திமுக. திமுக அரசு செய்யும் தவறுகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சரியாக சொன்னாலோ திமுக அரசு காணாமல் போய்விடும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. திமுக தேர்தல் 522 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக அரசு. அதில் 20 சதவீதம் அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.

அதிமுகவின் நிர்பந்தம் காரணமாக பல்வேறு திட்டங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு ஓட்டை உடைசல் தேறாத பேருந்துகளை முன் பின் பெயிண்ட் அடித்து விட்டு இலவசமாக பயணம் செய்ய வைக்கிறார். அதிமுக அட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியில் சுமார் 2000 பேருந்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. நான் சட்டப்பேரவையில் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் திமுகவுக்கு சாவு மணி தான். சோழிங்கநல்லூர் தொகுதியில் மேடவாக்கம் பாலம், வேளச்சேரி மேம்பாலம், மத்திய கைலாஷ் பாலம் இப்படி பல பாலங்களை இந்த பகுதியில் அமைக்கப்பட்டது.

அதிக கனமழை பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரெட் அலர்ட் கொடுத்தவுடன் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் பல புயல்கள் வந்தது, சிறப்பாக சமாளித்தோம். பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்தோம். ஒரு புயல் வந்தாலே திமுக அரசு காணாமல் போய்விடும்.

மக்கள் துன்பப்படும்போது ஓடோடி உதவி செய்வது தான் நல்ல அரசு. அது அதிமுக மட்டுமே. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்கிறார். திமுகவின் அறக்கட்டளையில் ஏராளமான நிதி உள்ளது, அதை எடுத்து மக்களுக்கு செலவு செய்யுங்கள். கார் பந்தயம் தேவையா? ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த போதுமான இடவசதி உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊதாரியாக திமுக அரசு செலவு செய்கிறது.

திமுக அரசியல் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிமுக அரசியல் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது கூட்டுறவுத் துறை மூலம் பொருட்களை வாங்கி விலைவாசியை கட்டுப்படுத்தினோம். கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை ஆளாக்கப்பட்டதால் அந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால் எஃப்ஐஆர் கசிந்துவிட்டது, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ‘யார் அந்த சார்?’ என்று நாங்கள் கேட்டோம். பல மந்திரிகள் முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் இதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதிமுக ஆட்சி மலரும்.

அந்த பெரும்புள்ளி யார் என்று வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அவை மாண்பை தொடர்ந்து சீரழித்தது திமுக தான். நாங்கள் ஒன்றும் சட்டமன்றத்தின் அவை மாண்பை சீரழிக்கவில்லை. நீட் ரத்து செய்ய ரகசியம் இருக்குது என்றார். என்ன ஆனது என கேட்டோம். மத்திய அரசாங்கத்தின் கையில் உள்ளது என்று சொல்கின்றனர். நாங்களும் அதுதான் சொன்னோம்.

ஸ்டாலின் அரசு திவால் ஆகப் போகிறது. திமுக அரசு 356 கோடி கடன் உள்ளது. இந்த பணம் எங்கே போனது? புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லையே? இதனை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம் பதில் இல்லை. நாங்கள் ஆறு மாவட்டத்தை உருவாக்கினோம். நீங்கள் ஒரு மாவட்டத்தை கூட உருவாக்கவில்லை. பல கல்லூரிகள் கொண்டு வந்தோம். நீங்கள் ஒரு கல்வி நிறுவனத்தை கூட கொண்டு வரவில்லை. கரோனாவால் வருமானம் இல்லாமல் ஆட்சியை செய்தோம் நல்ல வருவாய் இருந்தும் தமிழகத்திற்கு அதிக கடன் உள்ளது.

இந்த கடனால் நம் மீது வரி சுமை அதிகரித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைப்போம் என சொன்னீர்கள். ஆனால் வரியை உயர்த்தி விட்டீர்கள். மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழிற்சாலை வரி, தொழில் வரி உயர்ந்துள்ளது. மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சி தான் ஸ்டாலின் அரசு. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார்,” என பழனிசாமி பேசினார்.