ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் காவல்துறை அல்லது இராணுவப் பணி இல்லாததையும் அடையாளம் காண விசாரணை நடத்த வேண்டும் என ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.
இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.
இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் மத்திய பாஜக மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சரும், பதிண்டா நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், ‘ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற’ பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நகரில் நடைபெற்ற மெழுகுவர்த்தி அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கக் கோரினார்.மேலும், உளவுத்துறை தோல்வியையும், ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் காவல்துறை அல்லது இராணுவப் பணி இல்லாததையும் அடையாளம் காண விசாரணை நடத்த வேண்டும் என ஹர்சிம்ரத் கவுர் பாதல் கேள்வியெழுப்பினார்.