அங்கன்வாடி சத்துணவில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் ஏற்றுக் கொண்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்குவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர்.
இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்த கேரளாவின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அங்கன்வாடி உணவு பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்டு பிரியாணி சேர்க்கப்படும் என கூறியுள்ளார்.