நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: “நான் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல…நான் அழுது புலம்புபவனும் அல்ல…”

“நாங்கள் நிதி கேட்பது தமிழ்நாட்டு மக்களின் உரிமை… நான் அழுது புலம்புபவனும் அல்ல.. யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை கடந்த 6-ந் தேதி திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தது.

அப்போது இருந்ததை விடவும் கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆண்டுகளில் அதிக நிதியை அளித்து இருக்கிறோம். ரயில்வே துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் 7 மடங்கு நிதியை அதிகரித்து உள்ளோம். இவற்றை செய்த பின்னரும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும். அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என நரேந்திர மோடி பேசி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு மறைமுகமாக மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்துக்கு அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.

அப்போது அவர் பேசுகையில், எவ்வளவு கொடுத்தாலும் இங்கே இருப்பவர்கள் அழுகிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். நாங்கள் கேட்பது அழுகை அல்ல, நான் மிகுந்த அடக்கத்துடன் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது ஒன்றைத்தான். கையேந்தி நிற்க மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என்ன? என்று நீங்கள் சொன்னதை நினைவு படுத்துகிறேன். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசுகள் என்ன பிச்சைக்காரர்களா என்று முதலமைச்சராக இருந்தபோது மோடி கேட்டார்.

பிரதமரான உடனேயே மாநிலங்கள் நிதி கேட்டால் அழுவதாக மோடி விமர்சிக்கிறார். மாநிலங்கள் அழுவதாக மோடி கூறுவது எந்த வகையில் நியாயம்? ஆனால், இப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நீங்கள் கேட்டதையே, இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறேன் என்பதா? நான் கேட்பது அழுவது அல்ல, தமிழ்நாட்டின் உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல, ஊர்ந்து சென்று பதவி கேட்பவனும் அல்ல. உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். டெல்லியின் ஆளுமைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது” மு.க.ஸ்டாலின் எனப் பேசினார்.