தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி: படங்களை மட்டும் 3 மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா..?

மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் நடிகர் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், திமுகவினர்தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர்.

நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும். மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது.

அப்படி சொல்வதென்றால் தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண அரசாங்க பள்ளி மாணவ மாணவியர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு அல்லது மலையாளமும் கற்றுக் கொண்டால் ஆந்திராவிலோ அல்லது கேரளாவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசுதான்.

மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.